பாலியல் குற்றங்கள், வீட்டு வன்முறை;
நாட்டில் ஆபத்தான முறையில் வன்கொடுமை குற்றங்கள்
DIG ரேணுகா ஜெயசுந்தர March 25, 2025 தினகரன்
நாட்டில் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறு 1,420 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொது போக்குவரத்துகளின்போது 261 வழக்குகளும், ஒன்லைன் தளங்களினூடாக பதிவான வன்முறைகளில் 192 வழக்குகளும், வீதிகளில் 117 வழக்குகளும், பணியிடங்களில் 41 வழக்குகளும், பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகளில் இடம்பெற்ற சம்பவங்களில் 20 வழக்குகளும், மத இடங்களில் 9 வழக்குகள் மற்றும் பல்வேறு இடங்களில் பதிவாகிய வன்முறை சம்பங்களில் 192 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக இந்த புள்ளிவிபரங்கள், பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு அப்பால், வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
இது தொடர்பாக ஆண்டுதோறும் சுமார் 130,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.அத்துடன், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் உறுதி பூண்டுள்ளதாக பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
